தஞ்சாவூர்: ஆயூத பூஜையை முன்னிட்டு தஞ்சாவூர் பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் குறைவான அளவில் பூக்கள் வாங்கிச் சென்றனர். நவராத்திரி திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை இன்று கொண்டாப்படுகிறது. இன்று கல்விக்குரிய தெய்வமாக வணங்கப்படும் சரஸ்வதிதேவிக்கு வீடுகளளில் சிறப்புபூஜைகள் செய்து வழிபடுவார்கள். அதேபோல் தொழில் நிறுவனங்கள், சிறுசிறு பட்டறைகள், வியாபார நிறுவனங்கள் ஆயுதப்பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்கள். சுபமுகூர்த்தம், திருவிழா காலங்களில் பூக்கள் விலை உச்சத்தை தொடும். இந்நிலையில் ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூரில் அனைத்து இடங்களிலும் பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள், தேங்காய், பூசணி, பொரி, கடலை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.