Monday, June 17, 2024
Home » ஆன்டிபயாட்டிக் ஆபத்து! குழந்தைகள் ஜாக்கிரதை!!

ஆன்டிபயாட்டிக் ஆபத்து! குழந்தைகள் ஜாக்கிரதை!!

by kannappan

ஆன்டிபயாட்டிக் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில். மேலும் இது போன்ற ஆன்டிபயாட்டிக் எடுப்பதன் மூலம் ஆஸ்துமா, உணவு சம்மந்தப்பட்ட ஒவ்வாமை, சரும பிரச்னை, சுவாசப் பிரச்னை மற்றம் கண்பார்வையிலும் பிரச்னை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாகவே நாம் சாதாரண ஜுரம் மற்றும் சளி பிரச்னை இருந்தாலே ஆன்டிபயாட்டிக் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இதனை நாம் எவ்வாறு சாப்பிடவேண்டும். மேலும் அதற்கான வழிமுறைகள் என்ன என்று விளக்கம் அளிக்கிறார் ஜெம் மருத்துவமனையின் அனஸ்தியோலாஜிஸ்ட் மற்றும் இன்டர்வெஸ்ட் நிபுணர் (Senior Consultant Anaesthesiologist and Intensivist) டாக்டர் வான்மதி. ‘‘ஆன்டிபயாட்டிக் என்பது நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்கும் மருந்து. ஆனால் நாம் இதனை ரொம்பவே தேவையில்லாமல் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நுண்ணுயிர் தாக்கம் என்பது நம்முடைய உடலில் ஏற்படும் சாதாரண ஜுரம் மற்றும் சளியின் தாக்கம். இந்த இரண்டு பிரச்னைக்கும் சரியான மருந்து எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் சரியாகிவிடும். சில சமயம் நாம் சளிக்கு அவசியம் மருந்து எடுப்பதில்லை. அந்த தருணங்களில் அவற்றின் தாக்கம் இரண்டு நாட்கள் கூடுதலாக இருக்கும். பிறகு சரியாகிவிடும். காரணம் இது போன்ற சாதாரண பிரச்னைகளுக்கு நம் உடலில் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உள்ளது. எதிர்ப்பு சக்தி உயிரணுக்கள் நம் உடலில் ஏற்படும் பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமியின் தாக்கத்தை எதிர்த்து போராடி அதனை அழிக்கும் வல்லமை கொண்டுள்ளது. ஆனால், நம்மில் இந்த ஒரு வார பிரச்னையை தாங்கும் பொறுமை யாருக்கும் இல்லை என்று தான் சொல்லணும். நம்முடைய உடலுக்கு எது வந்தாலும் உடனடியாக சரியாக வேண்டும் என்நு தான் நாம் பார்க்கிறோம். இதனால் பெரும்பாலானவர்கள் டாக்டரிடம் செல்லும் போதே, உடனடியா குணமாக வேண்டும் என்று வற்புறுத்துவதால், அவர்களும் அதற்கான அதிக அளவு டோசேஜ் மாத்திரையினை தருகிறார்கள். இதில் ஆன்டிபயாட்டிக்கும் அடங்கும். சாதாரணமான காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அதற்கு பெரிய அளவில் ஆன்டிபயாட்டிக் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் கொடுக்கும் சாதாரண மருந்துகளிலேயே குணமாகிவிடும். ஆனால் என்ன ஒரு வாரம் இதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும். காரணம் இவை எல்லாம் வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற கிருமியின் தாக்கத்தினால் தான் ஏற்படுகிறது. இவை இரண்டுமே ஒரு வகையான நுண்ணுயிர்கள் தான். கண்ணுக்கு தெரியாத கிருமிகள். அதனால் சாதாரண தும்மல் இருந்தாலே காய்ச்சல் வருவது போல் இருக்கும். அவை இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் சில சமயம் நாம் என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும், சளி அதிகமாக கட்டிக் கொண்டு இருக்கும். அந்த சமயம் அவை பாக்டீரியாவின் தொற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் சைல்ட் காய்ச்சல் மற்றும் சளிக்கு நாம் ஆன்டிபயாட்டிக் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. ஆனால் இதுவே நான் சொன்னது போல் அதிக அளவு சளி கட்டிக் கொண்டு இருந்தால், அது பாக்டீரியா தொற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளலாம். ஆன்டிபயாட்டிக் என்பது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் கிருமிகளை குணப்படுத்த முடியாமல் போகும் போது அந்த சமயத்தில் கிருமிகளுடன் எதிர்த்து போராடி அதனை அழிக்க உதவக்கூடியது. எந்த ஒரு பிரச்னையும் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் கொடுக்க வேண்டும். அதாவது காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் போது அது குறித்து ஆய்வு எடுப்பது வழக்கம். அதில் டைபாய்ட், டெங்கு போன்ற பிரச்னையை கண்டறிந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கும். இது சாதாரண பிரச்னையாக இருக்கும் பட்சத்தில் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவே சிறு நீர் பாதையில் தொற்று ஏற்பட்டு இருப்பதை ஆய்வு மூலம் கண்டறிந்தால், அந்த சமயத்தில் ஆன்டிபயாட்டிக் எடுப்பது அவசியம், டாக்டரின் பரிந்துரை பேரில்’’ என்றவர் தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் எடுப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி குறிப்பிட்டார்.‘‘ஆன்டிபயாட்டிக் என்பது கொசு மருந்து போல. முன்பு நாம காயில் கொசுவர்த்தி தான் பயன்படுத்தி வந்தோம். இப்போது அதுவே லிக்விட்டாக மாறிவிட்டது. ஆனால் இந்த மருந்துக்கு கொசுக்கள் அடங்குவதில்லை. காரணம் அந்த மருந்தின் வீரியத்திற்கு ஏற்ப கொசுக்கள் தங்களை அடாப்ட் செய்துக் கொள்கின்றன. அதனால் நாம் மேலும் வீரியம் மிகுந்த மருந்தினை அறிமுகம் செய்கிறோம். இதே தன்மை தான் ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும். நாம் அவ்வப்போது, காரணமில்லாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொண்டால், நம் உடலில் உள்ள கிருமிகள் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும். அடுத்த முறை இந்த கிருமிகள் நம் உடலை பாதிக்கும் போது, முன்பை விட வீரியமான ஆன்டிபயாட்டிக் மருந்தினை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். இதனால் தான், பலர் என்ன மருந்து போட்டாலும் இந்த தலைவலி சரியாகவில்லை என்று புலம்புவார்கள். சாதாரண ஒரு தலைவலிக்கே இப்படி என்றால், மற்ற உடல் உபாதையினை நினைத்து யோசித்து பாருங்கள். முதன் முதலில் பென்சிலின் என்ற ஆன்டிபயாட்டிக் கண்டுப்பிடிச்சாங்க. அதுவரை ஆன்டிபயாட்டிக் என்பதே கிடையாது. அறுவை சிகிச்சை செய்யும் போதுக் கூட ஆன்டிபயாட்டிக் பயன்படுத்த மாட்டாங்க. இதனால் நோயாளிக்கு எதிர்ப்பு சக்திஎன் அளவு குறைவாக இருந்தால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இறக்கவும் நேரிடலாம். ஆனால் பென்சிலின் கண்டுபிடிச்ச பிறகு, இறப்பு என்பது குறைந்து விட்டது, அது நாள் வரை ஆன்டிபயாட்டிக் என்பதே கிடையாது. ஆனால் இப்போது, பல வகையான ஆன்டிபயாட்டிக் மார்க்கெட்டில் வந்துவிட்டது. மறுபக்கம் உடல் நிலையை காரணம் காட்டி ஆன்டிபயாட்டிக் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து அடிக்கடி கொடுக்கும் போது, அது நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை முற்றிலும் குறைத்துவிடும். மேலும் ஆன்டிபயாட்டிக் மருந்தின் வீரியத்திற்கு ஏற்ப கிருமிகள் தங்களை ஆடாப்ட் செய்துக் கொள்ளும். இதனால் நாம் அதிக வீரியமுள்ள மற்றொரு ஆன்டிபயாட்டிக்கை உறுவாக்க வேண்டும். இது இப்படியே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் நமக்கு எந்த ஒரு மருந்தும் எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். அதற்காக நாம் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ள கூடாதா என்று கேட்கலாம்?; ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் டாக்டராகவே கொடுத்தால். அப்படி கொடுக்கும் போது, அவர் மூன்று நாட்களுக்கு அதனை மூன்று வேளை எடுத்துக் கொள்ள சொல்வார். அவர் சொன்னதை பின்னபற்ற வேண்டும். சிலர் ஒரு நாளைக்கு மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுப்பார்கள், அப்படி எடுத்தால், நம் உடலில் உள்ள கிருமிகள் முற்றிலும் அழியாமல், அப்படியே தங்கிடும். இது மறுபடியும் உடல் உபாதைகள் ஏற்பட காரணமாகும். ஒன்று ஆன்டிபயாட்டிக் சாப்பிடாமல் நோயினை குணப்படுத்தலாம். அல்லது டாக்டர் சொன்னது போல் அந்த முழு டோசேஜ் ஆன்டிபயாட்டிக் மருந்தினை சாப்பிட்டு முடிக்க வேண்டும்’’ என்றவர் கோழிப்பண்ணை மற்றும் மீன் வளர்க்கும் இடங்களில் அதிக அளவு ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவதாக தெரிவித்தார். ‘‘பொதுவாக ஆடு, மாடை விட கோழி மற்றும் மீன்கள் தான் வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமியால் பாதிக்கப்படுகிறது. அதை தடுக்க மீன்கள் மற்றும் கோழிப் பண்ணையில் அதன் உணவில் ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துகிறார்கள். இதனை தான் நாம் அன்றாடம் உண்டு வருகிறோம். அவ்வாறு உண்ணும் போது, நமக்கே தெரியாமல் நம் உடலில் ஆன்டிபயாட்டிக் கலக்க வாய்ப்புள்ளது. இதனை நாம் எல்லாரும் கவனத்தில் கொள்வது அவசியம். மேலும் கோழிப் பண்ணை மற்றும் மீன் வளர்ப்பு துறையில் உள்ளவர்கள் இது போன்ற மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆன்டிபயாட்டிக் மருந்தினை எல்லாரும் எடுத்துக் கொள்ள முடியாது. உடலுறுப்பு மாற்றம் செய்தவங்க, புற்றுநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு பொதுவாகவே… எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கும். அவங்களுக்கு இந்த மாதிரி சாதாரண கிருமி தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவு சக்திக் கொண்ட ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுக்க வேண்டும். மற்ற எந்த மருந்தும் அவர்களின் பிரச்னைக்கு தீர்வு அளிக்காது. இப்போது இவை காய்கறி மற்றும் பழங்களிலும் கூட கலப்பதாக தெரியவந்துள்ளது. இது போன்ற விஷயங்களை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் நோயாளிகளின் தேவைக்கு என்ன என்று கண்டறிந்து அதற்கு ஏற்ப தான் ஆன்டிபயாட்டிக் கொடுக்க வேண்டும்’’ என்றவர் இன்பெக்சன் ஏற்படாமல் இருக்க சுகாதாரம் மிகவும் அவசியம். ‘‘எந்த ஒரு நபராக இருந்தாலும் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்கும் போது அவர்களுக்கு இன்பெக்சன் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தான் மருத்துவமனைக்கு சென்று வந்தாலோ அல்லது நோயாளிகளை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தாலோ உடனடியா கை, கால்களை கழுவ வேண்டும் அல்லது குளிக்க வேண்டும். இதன் மூலம் நமக்கு இன்பெக்ஷன் ஏற்படாமல் இருக்கும். அதே போல் மருத்துவமனையிலும் டாக்டர் அல்லது நர்சுகள் ஒரு நோயாளியை தொட்டு பேசினால் உடனடியாக தங்களின் கைகளை ஹாண்ட் சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும். இது போன்ற விஷயங்களை பொதுவாக தனியார் மருத்துவமனைகளைில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் சின்ன சின்ன கிளினிக்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். அதே போல நோயாளிகள் மட்டும் இல்லை வீட்டிலும் டாய்லெட் சென்றால் உடனடியாக கையினை சோப் கொண்டு கழுவிட வேண்டும். இந்த பழக்கத்தை நாம் குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே கடைப்பிடிக்க வேண்டும். அதிக தூசியாக இருக்கும் இடத்தில் இருந்தால் மூக்கினை மூடிக் கொள்ள வேண்டும். தும்மினால் வாயை மூடிக் கொள்ளணும். அப்படியே தும்மினாலும் உடனடியாக கையை கழுவவேண்டும். அதிக அளவு உணவினை வெளியே சாப்பிடக்கூடாது. சாலையில் எச்சிலோ அல்லது சிறுநீர் கழிக்கவோ கூடாது. காரணம் அதை நாம் மிதிக்கும் போது அதன் மூலமாகவும் தொற்று ஏற்படும். குப்பையினை தெருவில் கொட்டக்கூடாது. இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வரவேண்டும். மேலும் வளர்ந்த நாடுகளில் சுற்றுப்புறத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதாவது மழைபெய்தால் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்கிறார்கள். அப்படியே தேங்கினாலும் அங்கு கொசு பரவாமல் கவனிக்க வேண்டும். இது போன்ற விஷயங்களை வளர்ந்து வரும் நாடுகளிலும் கடைப்பிடிக்க வேண்டும். இது போன்ற சின்ன சின்ன சுத்தம் சார்ந்த விஷயங்களை கடைப்பிடித்தாலே நோய் தொற்று ஏற்படுவது குறையும். இனிமேல் வரப்போகிற தலைமுறையினருக்கு நாம் தொற்று அல்லாத வாய்ப்பினை அமைத்து தரவேண்டும். இல்லை என்றால் இதுவே அவர்களுக்கு முக்கிய பிரச்னையாக அமைந்திடும். இப்படியே விட்டுவிட்டால் நாம் இந்த கிருமிகளை அழிக்க விடாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நோய்க்கான மருந்தினை பொறுப்போடு சாப்பிடுவது மட்டும் அவசியம் இல்லை. நம்மை சுற்றி பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை வளராமல் பார்த்துக் கொள்வது அவசியம். உயிர் காக்கும் ஆன்டிபயாட்டிக்கினை தேவையான நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். காரணம் அவை உடலுக்கு தேவையான பாக்டீரியாவையும் அழிப்பதால், எதிர்ப்பு சக்தி குறையும் வாய்ப்புள்ளது’’ என்றார் டாக்டர் வான்மதி.தொகுப்பு: ஷம்ரிதி

You may also like

Leave a Comment

seventeen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi