ஆனைமலை: ஆனைமலை அருகே 3 வயது பெண் குழந்தை மர்மமாக இறந்தது. இது தொடர்பாக பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனைமலை அருகே உள்ள தம்மம்பதி கிராமத்தில், சுமார் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று தம்மம்பதி அருகே உள்ள கல்லாங்குத்து மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன் (21) மற்றும் சரோஜினி (20) ஆகியோரின் 3 வயது பெண் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தாய் சரோஜினியும், அருகில் வசிப்போரும் குழந்தையை வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழுந்தை இறந்துவிட்டது என்று தெரிவித்தார். மேலும் குழந்தையின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுந்ததால் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கோவை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் தலைமையில், கோவை கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகாசினி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். குழந்தையின் தாய் சரோஜினி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் குழந்தையின் இறப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆனைமலை போலீசார் குழந்தை மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த 3 வயது சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்….