சென்னை: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட மேம்பாலம் கோவூர் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், நெல்லூர் – விஜயவாடா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு கருதி தமிழ்நாட்டில் இருந்து பீகார், ஒடிசா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லையான எளாவூர் பகுதியில் நிறுத்தப்படுகின்றன. வடமாநிலங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் ஆந்திர போலீசார் தடுப்புவேலிகள் அமைத்து நிறுத்தி வைத்துள்ளனர். இருசக்கர வாகனங்கள், கார்கள் மட்டுமே சாலையின் மறுபுறத்தில் ஆந்திரா நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டதன் காரணமாக கனரக வாகனங்கள் சாலையில் சுமார் 5.கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன. ஒரு சில வாகனங்கள் எல்லையில் இருந்து மீண்டும் திரும்பிபுறப்பட்ட இடத்திற்கு செல்கின்றன. அவசரதேவைகளுக்கு செல்ல வேண்டிய வாகனங்களை கவரப்பேட்டை-சத்யவேடு வழியே திருப்பதி சென்று மாற்றுப்பாதையில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். டெல்லி, பஞ்சாப், அசாம், பீகார், நாகலாந்து உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் தற்போது சாலையில் அணிவகுத்து காத்திருக்கின்றன. இதனால் 7 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு பின்பு மேற்கண்ட தரைப்பாலம் அருகே மாற்றுவழி ஏற்பாடு செய்யப்பட்டதால் தற்போது வாகனங்கள் செல்கிறது….