* ₹3.40 லட்சம், போலி ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்* கர்நாடக மாநிலத்திலும் 56 வழக்குகள் உள்ளனதிருமலை : ஆந்திராவில் முதியவர்களுக்கு உதவி செய்வதாக கூறி ஏடிஎம் மையத்தில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹3.40 லட்சம், போலி ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ₹14 லட்சத்தில் புதிய வீடும் கட்டியுள்ளார். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்ட எஸ்பி அன்புராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜம்மலமடுகு நகரில் உள்ள கே.கே.எல்.கிராஸ் அருகே ஜம்மலமடுகு போலீஸ் டிஎஸ்பி நாகராஜஷூ, டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வர்லு தலைமையிலான போலீசார் நேற்று (நேற்று முன்தினம் மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஏடிஎம் மையங்களில் முதியவர்களை ஏமாற்றி பணம் திருடி வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், சித்தூர் மாவட்டம் சின்னகொட்டிகல்லு அடுத்த பெத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முகமது ரியாஸ்(43) என்பது தெரியவந்தது.இவர் மீது கடப்பா, சித்தூர், நெல்லூர், பிரகாசம், கிருஷ்ணா, கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் 56 வழக்குகள் உள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களுக்கு விவரம் தெரியாமல் வருபவர்கள் மற்றும் வயதானவர்களுக்கும் உதவி செய்வதாக கூறி ஏமாற்றினார். ஏடிஎம்மில் பணம் எடுத்து வழங்கி, ஒரிஜினல் ஏடிஎம் கார்டை தன்னிடமே வைத்து கொண்டுள்ளார். முகமது ரியாஸ் தன்னிடம் இருந்த போலி ஏடிஎம் கார்டுகளை அவர்களிடம் வழங்கியுள்ளார். அவர்கள் சென்ற பிறகு பல்வேறு ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். முதியவர்களை ஏமாற்றி ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தின் மூலம் தனது கடன்களை அடைத்துள்ளார். மேலும், ₹14 லட்சத்தில் புதிதாக வீடும் கட்டியுள்ளார். அவரது மூத்த மகள் திருமணத்திற்காக நகை வாங்க வைத்திருந்த ₹3.40 லட்சம் ரொக்கம், பல வங்கிகளின் போலி ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.இவ்வாறு, அவர் கூறினார்….