ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ரயில் பயணிகள் 5 பேர் மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கவுகாத்தி செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை வந்ததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாடுவா கிராமம் அருகே நிறுத்தப்பட்டது. அப்போது ஒரு சிலர் ரயிலில் இருந்து இறங்கி மற்றொரு தண்டாவாளத்தில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் எதிர் திசையில் வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் முன்பு அதிவேகமாக மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ரயில் விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 2 பேர் அசாமை சேர்ந்தவர்கள். 3 பேர் ஓடிஸாவை சேர்ந்தவர்கள். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அப்பகுதி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை கஅளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார். …