ஆறுமுகநேரி, ஏப்.5: ஆத்தூர் சோமநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஆத்தூர் சோமநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்கார ஆராதனை திருவீதி உலா மற்றும் சமய சொற்பொழிவு, கலை நிகழச்சிகளும் நடந்தது. இதில் 10ம் திருநாளான நேற்று (4ம்தேதி) காலையில் சுவாமி, அம்பாள் அபிஷேக அலங்கார வழிபாடுகளும், அதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர்.
காலையில் திருத்தேர் வடம் பிடித்தலும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து தேர் நான்கு ரத வீதிகள் வழியே நிலையம் வந்தடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் தெப்பத்திருவிழாவும், சுவாமி, அம்பாள் இடப வாகனத்தில் திருவீதி உலாவும், தொடர்ந்து சமய சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவில் மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், சிற்பி தர், ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வம், ராஜாராம் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை சோமநாத சுவாமி கோயில் பொறுப்பு நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, தக்கார் ஜெயந்தி, ஆய்வாளர் செந்தில்நாயகி, அர்ச்சகர் ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.