ஆண்டிமடம், மார்ச் 26: ஆண்டிமடம் அருகே விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் மோதி பெண் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமம் காலனி அரசமர தெரு பிச்சமுத்து மனைவி கொளஞ்சியம்மாள் (59). கூலி தொழிலாளி. இவர் நேற்று விவசாய வேலை செய்துவிட்டு இளைப்பாறுவதற்காக வரப்போறோம் அமர்ந்திருந்தார். அப்பொழுது அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கொளஞ்சியம்மாள் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த கொளஞ்சியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் அதே ஊரைச் சேர்ந்த வேல்முருகன் டிராக்டரை விட்டு இறங்கி தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் கொளஞ்சியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து டிராக்டர் டிரைவர் வேல்முருகனை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.