ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியை அடுத்த மறவபட்டி அருகே குத்துராய பெருமாள் கோயில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்குள்ள பாறையில் சிறுவர்கள் ஆனந்தமாக வழுக்கி விளையாடுகின்றனர். ஆண்டிபட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான ஏத்தகோயில் மற்றும் வாசிமலையான் கோயில் மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மறவபட்டி கிராமத்திற்கு அருகே உள்ள குத்துராய பெருமாள் கோயில் அருவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.மறவபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாய நிலங்கள் வறண்டு காணப்பட்ட நிலையில் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் விவசாய கிணறுகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் வறண்டு கிடக்கும் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் யானை போன்ற வயிறு உடைய பள்ளத்தில் விழும் இந்த தண்ணீரில் அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுடன் பாறையில் சறுக்கி விழுந்து குளித்து மகிழ்கின்றனர்….