Thursday, May 23, 2024
Home » ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவர்களை நீக்கி மிரட்டல் சினிமா பட பாணியில் ரவுடியை வெட்டி கொன்றோம்  8 பேர் பரபரப்பு வாக்குமூலம் ஆட்டோ, பைக், கத்தி பறிமுதல்

ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவர்களை நீக்கி மிரட்டல் சினிமா பட பாணியில் ரவுடியை வெட்டி கொன்றோம்  8 பேர் பரபரப்பு வாக்குமூலம் ஆட்டோ, பைக், கத்தி பறிமுதல்

by Karthik Yash

புதுச்சேரி, நவ. 4: புதுச்சேரி, கோவிந்தசாலை பகுதியை சேர்ந்தவர் பரத் (32). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே சில மாதங்களாக புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பரத் ஆட்ேடா ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு கும்பல் பரத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட 2 தனிப்படைகள், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தியது. அதில் பரத் ஆட்டோ ஓட்டி வந்த ஸ்டாண்டில் சிலருடன் பிரச்னை செய்து வந்ததும், இதன் எதிரொலியாக முதலியார்பேட்டை ரவி தலைமையில் கொலை சதித்திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது.

இதனிடையே கொலையாளிகள் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான வானூர் வட்டம் இரும்பை கிராமத்தில் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் கிரைம் போலீசார் உடனடியாக அப்பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த கொலையாளிகள் 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், முதலியார்பேட்டை, பட்டம்மாள் நகரை சேர்ந்த ரவி (32), கோவிந்தசாலை அந்தோணியார் கோயில் தெரு முரளி (எ) கருப்பு முரளி (31), பெர்னான்டஸ் (எ) பெர்னா (33), கோவிந்தசாலை நேரு நகர் பொட்டுவீரா (எ) விக்கி (எ) சரவணன் (27), ராஜீவ்காந்தி குடியிருப்பு பகுதி ஸ்டீபன்ராஜ் (29), அந்தோணியார் கோயில் தெரு சதீஷ்குமார் (28), கோவிந்தசாலை ஆனந்த் (26), ஜான் (எ) மரியா ஜான் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொலை உள்ளிட்ட சில வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பரத், புதிய பஸ் நிலையம் ஒட்டியுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் கோவிந்தசாலை பகுதியில் சிலரிடம் சண்டை போட்டு ஆட்டோ ஸ்டாண்ட்டை முழுமையாக அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். தட்டிக்கேட்ட சிலரையும் பரத் மிரட்டியுள்ளார். ஆயுதபூஜைக்கு பின் அவரது ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த கருப்பு முரளி, பெர்னா, பொட்டுவீரன் ஆகியோரை நீக்கி, அங்குள்ள தகவல் பலகையில் பெயர்களை எழுதி வைத்து தடை போட்டுள்ளார்.

தற்போது தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் குடும்ப பிழைப்புக்கு வேறு வழியில்லை என 3 பேரும், சக ஆட்டோ டிரைவர்களும் கெஞ்சியும் பரத் ஏற்க மறுத்துவிட்டார். பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் 3 பேரும் ரவியுடன் சேர்ந்து பாண்டி மெரீனாவுக்கு சென்று பரத்தை தீர்த்துக் கட்டுவது தொடர்பாக சதித்திட்டம் தீட்டினர். அப்போது தங்களுடன், கோவிந்தசாலை பகுதியில் பரத்தால் பாதிக்கப்பட்ட நபர்களான ஸ்டீபன்ராஜ், சதீஷ்குமார், ஆனந்த், ஜான் உள்ளிட்ட சிலரையும் தொடர்பு கொண்டு ஒன்று திரட்டினர்.

அப்போது பரத் தினமும் அதிகாலை 5 முதல் 9 மணிக்குள் ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து சவாரி மூலம் பணம் சம்பாதித்துவிட்டு செல்வது தெரியவந்த நிலையில், அந்த நேரத்தில் அங்கு சென்றால் கதையை முடித்துவிடலாம் என முடிவெடுத்தனர். இதற்காக சினிமா பட பாணியில் சில நாடகங்களை அரங்கேற்ற திட்டமிட்டனர். அதன்படி 3 குழுவாக தனித்தனியாக பிரிந்து சம்பவ இடத்தில் திடீரென ஒன்று சேர்வது, முன்னதாக முரளி, பரத்திடம் மன்னிப்பு கேட்டு அவரது கால்களை பிடித்து கெஞ்சுவது, அப்போது அங்கு ரவி கத்தியை மறைத்து வைத்து தயாராக நிற்பது உள்ளிட்ட சதிகளை வகுத்துள்ளனர்.

தங்களது திட்டத்தின்படி ஆட்டோ ஸ்டாண்டில் பரத் காலை பிடித்து முரளி மன்னிப்பு கேட்ட நிலையில் அருகில் நின்று கொண்டிருந்த ரவி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத் வயிற்றில் குத்தியுள்ளார். 2 முறை குத்தியும் அவர் வலியால் துடிக்கவே, முரளி, பரத் காலை வாரிவிட்டு கீழே விழச் செய்துள்ளார். அதற்குள் அங்கு தனித்தனி குழுவாக தயாராக இருந்த மற்ற கூட்டாளிகள் ஓடிவந்து அவரது கழுத்து, தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இவ்வாறு அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனர். இதனிடையே கைதான கொலை கும்பலிடம் இருந்து 2 ஆட்டோக்கள், 2 பைக், 4 கத்திகள், 2 குத்து கத்திகள், 1 செல்போன் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், அனைவரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்த உருளையன்பேட்டை போலீசாரை, சீனியர் எஸ்.பி. நாரா.சைதன்யா பாராட்டினார்.

You may also like

Leave a Comment

14 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi