குன்றத்தூர், மார்ச் 1: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த் (23). இவர், அதே பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே 5 பேர் கொண்ட கும்பல் நிஷாந்த்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில்,அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகள் 5 பேரும் அருகிலுள்ள ஏதாவது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகக்கூடும் என்பதால், செங்கல்பட்டு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய நீதிமன்றங்களில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதற்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.