காஞ்சிபுரம்: ஆட்டோவில் கடத்திவந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 354 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று, கீழம்பி- காஞ்சிபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் 284 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து கீழம்பி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (25), பிரபு (22) மற்றும் சிறு காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஹரிஹரன் (21), கிருஷ்ணகுமார் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சின்னையன்சத்திரம், கருக்குப்பேட்டை பகுதிகளில் 70 மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த சிங்காடிவாக்கத்தை சேர்ந்த அர்ஜுன்ராஜ் (40), பூசிவாக்கத்தை சேர்ந்த கமல் பாஷா (30) ஆகியோரை கைது செய்தனர். ‘’கள்ளத்தனமாக மதுபானம், கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்….