தா்மபுரி, பிப்.4: தர்மபுரி மாவட்ட அரசு அலுவலகங்களில், ஆட்சிமொழித்திட்டச் செயலாக்கம் குறித்து 2 நாட்கள் கருத்தரங்கம் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித்திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெறத் துணை புரியும் வகையில், தர்மபுரி மாவட்டத்தில், 2023-2024ம் ஆண்டிற்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் வரும் 6 மற்றும் 7ம்தேதி ஆகிய 2 நாட்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை நடைபெறும். இதில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து துறை, வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களிலிருந்து அலுவலர் ஒருவர் மற்றும் பணியாளர் தொகுதி பொறுப்பு வகிக்கும் கண்காணிப்பாளர் (அ) உதவியாளர் (அ) தட்டச்சர் நிலையில் ஒருவர் என இருவர் பங்கேற்க வேண்டும். இந்த கருத்தரங்கில் மாவட்ட நிலை அலுவலர்கள், கோட்ட அலுவலர்கள், வட்ட நிலை அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலகங்களின் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சிமொழி திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே ஒப்பம், சுருக்கொப்பமிட வேண்டும் என்பது முதல் அனைத்து நிலைகளுக்குமான அரசாணைகள் மற்றும் பட்டறிவு எடுத்துரைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.