திருச்சி, ஏப். 11: திருச்சியில், தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையம் இ.பி காலனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47), இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை சென்றவர் நேற்று வீடு திரும்பி உள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகள், சுமார் 2 கிலோ வெள்ளி மற்றும் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர், அப்பகுதியில் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.