திண்டுக்கல், அக்.16: திண்டுக்கல்லில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ராஜ் மோகன் தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்ட செயலாளர் பீட்டர் முன்னிலை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் சிறப்புரையாற்றினார். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய அரசாணை வெளியிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020ஐ கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் செல்வம், காப்பீட்டு ஊழியர் சங்க கோட்டச் செயலாளர் வாஞ்சிநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.