தேனி, அக். 18: தேனி பழைய பஸ்நிலைய வளாகத்தில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடப்பதால் பழைய பஸ் நிலையம் மூடப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தேனியில் உள்ள ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக தேனி பழைய பஸ்நிலையத்தில் ராஜவாய்க்கால் பாயும் பகுதியில் இருந்த நகராட்சி தரைக்கடைகள், பூமார்க்கெட் ஆகிய பகுதிகளின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று தொடங்கியது. மேலும், இப்பஸ் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு வடக்கு பகுதியில் ராஜவாய்க்கால் உள்ள பகுதியில் ஜேசிபி வாகனங்கள் மூலமாக வாய்க்கால் தோண்டும் பணி நேற்று தொடங்கியது.
இதன்காரணமாக ஆக்கிரமிப்புகள் ஆகற்றும் பணி முடிவடையும் வரை இப்பழைய பஸ் நிலையத்திற்குள் போடி, கம்பம் பகுதியில் இருந்தும், தேனி புதிய பஸ்நிலையத்தில் இருந்து போடி, கம்பம், குமுளி, மூணாறு போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லமுடியாதபடி, நேற்று பஸ்நிலையத்தின் வடக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. இதன்காரணமாக இப்பழைய பஸ்நிலையத்தின் கம்பம்சாலை மற்றும் மதுரை சாலை பகவதி அம்மன் கோயில் அருகே பயணிகள் பஸ்களில் ஏறி, இறங்கியதால் இப்பகுதிகளில் பயணிகளின் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.