பெரியபாளையம்: அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடிமையம் அருகே உள்ள பழுதடைந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஆபத்து விளைவிக்கும் முன்பே அகற்றி புதிய தொட்டியை கட்டித்தர பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ளது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி. இங்கு, 350 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அங்கன்வாடி மையம், அரசு தொடக்கப்பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், நூலக கட்டிடம், சேவை மைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த கட்டிடங்கள் அமைந்துள்ள வளாகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்துதான் இப்பகுதி மக்களுக்கு, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனை அடுத்து, இங்குள்ள தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில், இந்த கிராமத்தை சுற்றி உள்ள குழந்தைகள் இந்த பள்ளியில்தான் பயின்று வருகின்றனர். இந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து, அதன் தூண்கள் பலவீனம் அடைந்து கான்கிரீட் பூசுகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழும் அபாயம் உருவாகி உள்ளது. அப்படி சரிந்து விழுந்தால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். பள்ளி அருகே இந்த மேல்நிலைத் தேக்க தொட்டி உள்ளது. மேலும் இதன் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில்தான் மாணவர்கள் விளையாடுவது வழக்கம். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கும் அச்சப்படுகின்றனர். இதில், ஆபத்து விளைவிக்கும் முன்பே இந்த குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய மேல்நிலைத் நீர் தேக்கத்தொட்டி கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….