சென்னை: திருமுல்லைவாயலில் அளவுக்கு மீறி மது குடித்த ஐ.டி. ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமுல்லைவாயலை சேர்ந்தவர் சத்தியசீலன் (38). அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இவருக்கும் பெருங்களத்தூரை சேர்ந்த வந்தனா என்பவருக்கும் திருமணம் நடந்தது. வந்தனா, கருத்துவேறுபாடு காரணமாக சத்தியசீலனை விட்டு பிரிந்து பெருங்களத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இவர்களுக்கு 8 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர், நேற்று முன்தினம் மதியம் தனது தாய் மெர்சியிடம் காரை சர்வீஸ் கொண்டு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார் சத்தியசீலன். பிறகு, திருமுல்லைவாயல் சிடிஎச் சாலை அம்பேத்கர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு சாலையோரம் காரை நிறுத்திவிட்டு மது அருந்தி உள்ளார். மதுபோதை அதிகமானதால் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து, நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது காருக்குள் அளவுக்கு மீறிய போதையால் சத்தியசீலன் இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்….