சேலம், ஜூன்28: சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடத்தை மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் நேற்று ஆய்வு செய்தார். சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அய்யந்திருமாளிகை துவக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் ₹2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது. இம்மையத்தில் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மையம் தரைதளம், முதல் தளம் ஆகிய இரண்டு தளங்களை கொண்டது.
தரை தளத்தில் 60 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 10 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், நூலக அறை, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை, முதல் தளத்தில் 35 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 5 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், 30நபர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 16 கண்காணிப்பு கேமிரா, 75இஞ்ச் எல்.சி.டி டிவி, இரண்டு புரஜெக்டர், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான மைக் மற்றும் சுவர் ஒலி பெருக்கிகள், புத்தக அலமாரிகள், சைகை மொழி பேனர்கள், அபாகஸ் உபகரணங்கள், டிக்டாக் டோ உபகரணங்கள், கண்ணாடி புரம்மை உபகரணங்கள், தளவாட பொருட்கள், மையத்திற்கு வெளியில் அமர்வதற்கான இருக்கைகள், கழிப்பறை வசதிகள் போன்றவை உள்ளன. இதற்கான பணிகள் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா என கமிஷனர் கேட்டறிந்தார். மேலும், மையத்தை நன்கு பராமரிப்பு செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் அன்புசெல்வி ஆகியோர் உடனிருந்தனர்.