புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், காயக்காடு புதிய பேருந்து நிலையத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று திறந்து வைத்து, ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பேவர் பிளாக் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் இன்றையதினம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் காயக்காடு புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைத்து, ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பேவர் பிளாக் பணிக்கு அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி ஒன்றியம், தொழுவங்காடு பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காயக்காடு புதிய பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் பணி அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.