சென்னை : கொரோனாவை குணப்படுத்தும் 2டிஜி மருந்து உற்பத்தி எப்போது தொடங்கப்படும், ஆந்திராவைச் சேர்ந்த சித்த வைத்தியர் ஆனந்தய்யாவின் கொரோனா மருந்திற்கு அங்கீகாரம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சரவணன் தமது மனுவில் கொரோனா தொற்றை குணப்படுத்தும் வகையில், 2டிஜி எனும் மருந்தை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை சந்தைக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார். சர்வதேச மருந்து மாபியாக்கள் காரணமாக கொரோனா மருந்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2டிஜி மருந்தை உற்பத்தி செய்வதற்கு 40 இந்திய நிறுவனங்கள் முன்வந்ததாகவும் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் பதில் அளித்தார்.2டிஜி மருந்து மூலம் 61 வயது முதியவர் 2 நாட்களில் குணமடைந்து இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் ஆந்திர மாநிலம் கிரிஷ்ணபட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கொரோனா குணப்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அவரை சம்மந்தப்பட்ட அமைச்சர் அழைத்து பேசி அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார்.ஆனந்தய்யா மருந்திற்கு அங்கீகாரம் வழங்கி இருந்தால் அவர் சர்வதேச அளவில் புகழ் அடைந்து இருப்பார் என்று நீதிபதிகள் கூறினர்.ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்….