அரியலூர், மார்ச்29: உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் தொகுதி பாராளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனி மேரி விஜயா உத்தரவின் பேரில் அரியலூர் அருகேயுள்ள அஸ்தினாபுரம் முருகன் கோவில் அருகே நேற்று மதியம் சுமார் 1:30 மணி அளவில் தாசில்தார் சுசிலா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசி போலீசார் முகமது ஆசிப் ஆகியோர் அடங்கிய பறக்கும் படை குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு பைக் சோதனை செய்தபோது பைக்கில் உரிய ஆவணம் இன்றி 1.5 லட்சம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து பைக்கில் வந்த குருவாடி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரிடம் விசாரித்தபோது உரிய ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை. இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரியலூர் ஆர்டிஓ விடம் ஒப்படைக்கப்பட்டது.