பந்தலூர், ஜூலை 29: பந்தலூர் அருகே நாடுகாணி சோதனைச்சாவடியில் நேற்று எஸ்ஐ ஷாஜி மற்றும் காவலர்கள் பழனிசாமி, வினீத் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி ஏற்றி வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சுனீஸ் (37) என தெரியவந்தது. சுமார் 2 கிலோ கஞ்சாவையும், லாரியையும் பறிமுதல் செய்து தேவாலா காவல்துறையினர் வழக்குபதிந்து சுனீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.