Friday, May 17, 2024
Home » அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு நிபந்தனை ஜாமின்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு நிபந்தனை ஜாமின்

by kannappan

ராசிபுரம்: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் சரோஜா இன்று ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜரான முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. இந்த வகையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சரோஜா ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு சரோஜா வெற்றி பெற்றார். இதையடுத்து ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட சரோஜா தோல்வியை தழுவினார்.அதே நேரத்தில் அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் பல்வேறு மோசடிகள் செய்ததாக புகார்கள் எழுந்தது. இதில் ராசிபுரத்தை சேர்ந்த சரோஜாவின் உறவினரான குணசீலன் என்பவர், நாமக்கல் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்காக பல்வேறு நபர்களிடமிருந்து ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் வசூலித்து முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சனிடம் வழங்கினேன். ஆனால் பணி நியமனம் எதுவும் செய்யவில்லை. எனவே மோசடி செய்த முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.இதனடிப்படையில் போலீசார், தங்களை கைது செய்வார்கள் என்பதால் சரோஜாவும், அவரது கணவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டார். வாரம் 2 முறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், உரிய நாளில் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் இன்று ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்….

You may also like

Leave a Comment

15 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi