சென்னை: தமிழக சட்டபேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஒன்று இரண்டு மாதங்களில் இந்தியாவின் சிறந்த முதல்வர் இடத்தை எங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் உள்ள பிரபல நாளிதழில் தமிழக முதல்வர் பற்றி பாராட்டு கட்டுரை எழுதியுள்ளது. கடந்த 13ம் தேதி பெட்ரொல் மீதான மாநில வரி ரூ.3 குறைக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் தமிழகத்தை பார்த்து வருகிறார்கள். என்னிடம் கூட 30க்கும் மேற்பட்ட ஊடகங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது.கடந்த 13ம் தேதி பெட்ரோல் ரூ.3 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு அன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, கடந்த 17ம் தேதி வரை இரவு வரை தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை குறித்து தெளிவான முடிவு தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி வரை தமிழகத்தில் 91 லட்சத்து 88 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனை ஆனது. வரியை குறைத்த பிறகு கடந்த நான்கு நாட்களில் 1 கோடியே 3 லட்சத்து 17 ஆயிரம் லிட்டர் விற்பனை ஆகியுள்ளது. அதன்படி கடந்த மூன்று நாட்களில் தினமும் 11 லட்சத்து 27 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைத்ததால் மக்கள் பயன் பெற்றுள்ளனர்.ஒன்றிய அரசு பல்வேறு துறைகளில் எடுக்கும் தகவல்களை(டேட்டா) மாநில அரசுக்கு தர வேண்டும். அதற்கான முயற்சி எடுக்கப்போகிறோம். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 110வது விதியின் எத்தனை அறிவிப்பு எத்தனை? இதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தொடருக்கு முன்பாக இதுகுறித்த ஆய்வு முடிவுகள் அவையில் வைக்கப்படும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வருவாய் இழப்பு ரூ.4 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இது ஒன்றிய அரசு நமது மாநிலத்திற்கு தர வேண்டிய நிதி ஆகும். மேலும் 14வது நிதிகுழு பரிந்துரையால் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி ரூ.90 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது என்றார். …