கும்பகோணம்:கும்பகோணம் அருகேயுள்ள பாபுராஜபுரத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன் மகன் முகமது ஜூல்பிஹார். வியட்நாமில் வேலை பார்த்து வரும் இவருக்கு ரில்ஹானா என்ற மனைவி மற்றும் மகள் ஸரின் (10) ஆகியோர் உள்ளனர். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வரும் சிறுமி ஸரின் 4ம் வகுப்பு முடித்து 5ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் நேற்று தனது தாத்தா ஜலாலுதீனுடன் இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகேயுள்ள அபாகஸ் பயிற்சி வகுப்பை முடித்த பிறகு, மீண்டும் பாபுராஜபுரம் திரும்பி தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். அப்போது பழைய பாலக்கரையில் உள்ள பாலத்தில் பயணித்த போது, எதிர்புறம் கும்பகோணத்தில் இருந்து திருவள்ளியங்குடி செல்லும்அரசு மாநகர பேருந்து வந்துள்ளது.
அப்போது இருசக்கர வாகனத்திற்கு முன்னே ஆட்டோ ஒன்று சென்றபோது கூட்ட நெரிசலாக இருந்ததால் ஆட்டோ பிரேக் அடித்து நின்றது.அப்போது அதன் மீது மோதாமல் இருக்க, இருசக்கர வாகனத்தில் வந்த ஜலாலுதீன் பிரேக் அடித்த போது, நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் தாத்தாவும், பேத்தியும் சாலையில் விழுந்தனர். இதில் எதிர்பாராதவிதமாக, பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவி ஸரின் (10) பரிதாபமாக சம்பவயிடத்திலேயே பலியானார். தாத்தா ஜலாலுதீன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல்றிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் ஸரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.