வேலூர், பிப்.23: பேரணாம்பட்டில் வாடகை இடத்தில் இயங்கி வரும் அரசு உருது பள்ளிக்கு ₹25 லட்சம் மதிப்பிலான நிலத்தை வழங்கிய வாலிபரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டினார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக 8ம் வகுப்பு வரை படித்து பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தினார். சிறு சிறு கூலி வேலை செய்து படிப்படியாக முன்னேறி இன்று கட்டுமான பணியினை செய்து கொண்டிருக்கிறார். இவர், ஏழை எளிய மக்களுக்கு கிடைத்திட கல்வி சேவை செய்து வருகிறார். இவர் பேர்ணாம்பட்டு தரைக்காடு பகுதியில் உள்ள அரசு உருது தொடக்கப்பள்ளி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி இதுநாள் வரை பள்ளிக்கு இடம் கட்டிடம் இல்லாமல் ஒரு சிறிய 800 சதுர அடி கொண்ட வாடகை வீட்டில் இயங்கி வந்தது.
இதையறிந்த இம்ரான், அந்த பள்ளிக்கு இடத்தை வாங்கி தருவதாக கூறினார். இதையடுத்து 2988 சதுரடி பரப்பளவு கொண்ட ₹25 லட்சம் மதிப்பிலான காலியிடத்தை தமிழ்நாடு தொடக்கக்கல்வி துறைக்கு தானமாக வழங்கினார். மேலும், இடப்பற்றாக்குறை ஏதும் இருப்பின் அருகில் உள்ள காலிடத்தையும் வாங்கித் தருகிறேன் என இம்ரான் கூறியுள்ளார். பள்ளிக்கு இடத்தை தானமாக வழங்கி இம்ரானை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தயாளன் ஆகியோர் நேற்று சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர். இதில் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.