சென்னை, பிப்.29: தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்புத் துறையால் அனைத்து அரசுத் துறை வாகனங்களுக்கு தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறை ஊர்திகளுக்கு தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் 20 மாவட்ட தலைநகரங்களில் அரசு தானியங்கி பணிமனைகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், போக்குவரத்துத் துறையின் 2022-23க்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் பழுதுபார்க்கும் பணியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பழுது நீக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், அதற்கு தேவையான சிறப்பு கருவிகள் மற்றும் சாதனங்களை நிறுவுவதன் வாயிலாக சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி, சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் பணிகளுக்காக ரூ.70 லட்சத்து 73 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டு அதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கிண்டியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தானியங்கி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பொதுமுதலாள் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 20 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்தநிகழ்ச்சியில், போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.