நாமக்கல், ஜூன் 16: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் தனியார் ஐடிஐக்களில் சேர்க்கை பெற விரும்புவோர், வருகிற 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும். நாமக்கல் அரசு ஐடிஐ, மாவட்ட வேலைவாய்ப்பு மையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலமாக இணையதளத்தில், கல்விச் சான்று, ஜாதி சான்று, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சான்று, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைந்து, அதிகபட்சம் 40 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.விண்ணப்ப கட்டணம் ₹50ஐ ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்க வரும்போது 10, 8ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழுடன் வரவேண்டும். 2021 ஆண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் 9ம் வகுப்பு சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்கலாம்.அரசு ஐடிஐகளில் படிப்பவர்களுக்கு பயிற்சி காலத்தில், ஒவ்வொரு மாதமும் ₹750 உதவித்தொகை, பாடப்புத்தகம், வரைபட கருவிகள், 2 ஜோடி சீருடைகள், பஸ் பாஸ், சைக்கிள், லேப்டாப் மற்றும் ஒரு ஜோடி காலணி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் உள்ளுர் தொழில் நிறுவனங்களில், உதவித்தொகையுடன் கூடிய குறுகிய கால பயிற்சி வழங்கப்படும்.
ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் ஓராண்டுக்கு ஒப்பந்த முறையில் தொழிற்பழகுநராக (அப்ரண்டீஸ்) பயில வாய்ப்புள்ளது.மேலும் விவரங்களை அரசு ஐடிஐக்கு நேரில் சென்று பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.