சேலம், ஏப். 26:தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன்படி, ஓமலூர் அடுத்த பாலகுட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சேலம் லீ ஷாவ்லீன் குங்பூ அனைத்து தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு சங்கம் சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த மாதம் முதல் வாரத்திலிருந்து நடந்த இலவச பயிற்சியில், 85 மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கராத்தே, குங்பூவில் விதிக்கப்பட்ட அடிப்படை பயிற்சி முறைகளையும், செல்ப் டிபரன்ஸ் மூவ்மென்ட்ஸையும் மாணவிகள் கற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் கிராண்ட் மாஸ்டர் ரவிக்குமார் கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட 3 மாணவிகளுக்கு விருதுகள், 20 சிறந்த மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தகுதி சான்றிதழ்களை வழங்கினார்.