தஞ்சாவூர், ஏப்.15: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு. பனையூர் கிராமத்தில் விவசாயிகள் வயலில் நல்லேர் பூட்டி, நெல், எள். உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை தூவி சூரிய பகவானை வழிபட்டு இந்த ஆண்டிற்கான வேளாண் பணிகளை துவங்கினர். ஒவ்வொரு ஆண்டும்.சித்திரை முதல் நாள் டெல்டா மாவட்டங்களில் நல்லேர் பூட்டும் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் பனையூர் கிராமத்தில், விவசாயிகள் வயலில் கலயம் வைத்து பூ, பழம், காப்பரிசி நெல் உள்ளிட்ட நவதானியங்களை வைத்து பூஜை செய்து, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர். ஏர் மாடு மற்றும் டிராக்டர்களுக்கு ஆரத்தி காட்டி வயலில் உழுது வேளாண் பணிகளை துவங்கினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூரியனை வழிபட்டு நெல் மணிகளை வயலில் தூவி வழிபட்டனர்.
இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல், விவசாயம் செழித்து ஓங்க வேண்டும் என வேண்டி இந்த ஆண்டிற்கான வேளாண் பணிகளை விவசாயிகள் தொடங்கினர். திருவையாறு: திருவையாறு அருகே நடுக்காவேரியில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு விவசாயிகள் நெல் வயல்களில் நல் ஏர்பூட்டும் விழா நடந்தது. சித்திரை முதல் நாளை உழவுத்தொழில் தொடங்குவதற்கு சிறந்த நாளாக கொண்டாடுவதை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் வீடுகளில் விதைநெல் வைத்து வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்து பின்னர் விவசாயிகள் தங்கள் உழவு மாடுகளுடன் தங்கள் வயல்களுக்கு சென்று நல்ஏர் பூட்டி உழவு பணி மேற்கொண்டனர்.