குன்னூர் : குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களில் இன்று நாள் வரை வாக்கு கேட்டு எந்த ஒரு வேட்பாளர்களும் வராததால் பழங்குடியின மக்கள் அதிருப்தி.தமிழகத்தில் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. வேட்பாளர்கள் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டர்கள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி மத்தியில் ஆறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தோடர், கோத்தர் குரும்பர்,இருளர், பனியர்,காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 40 ஆயிரத்திற்கும் குறைவாகும். இவர்கள் வசிக்கும் இடங்களில் வேட்பாளர்கள் இது நாள் வரை சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடவில்லை என்று பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அனைத்து இடங்களுக்கும் சென்று குறைகளை கேட்டறியும் வேட்பாளர்கள் தங்களது கிராமங்களுக்கு இது நாள் வரை வரவில்லை என்றும் தங்களை அரசியல் கட்சிகள் ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்தனர். குன்னூர் அருகே உள்ள குரும்பாடி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களில் பலருக்கு தேர்தல் நடைபெறும் தேதி கூட தெரியாமல் உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமும் இதுநாள் வரை பழங்குடியின கிராமங்களுக்கு சென்று தேர்தல் குறித்து எவ்விதமான விழிப்புணர்வும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்….