வேடசந்தூர், அக். 21: அய்யலூர் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெரும். இச்சந்தைக்கு அய்யலூரைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்கான காய்கறிகளை வாங்கிச் செல்வர். காய்கறி சந்தையானது திருச்சி முதல் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலைச் சாலை அருகே மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெரும். மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் வண்டி வாகனங்களை நிறுத்திக் கொள்ளும் அளவிற்கு இடவசதி உள்ளது.
இருப்பினும் சந்தைக்கு வரும் வாகனங்கள் மற்றும் பழக்கடைகள் போன்றவைகள் புறவழிச்சாலையை ஆக்கிரமித்து பாதி வழியில் கடை வைத்திருப்பதால் புறவழிச் சாலை வழியே செல்லும் அரசு பேருந்து மற்றும் பிற வாகனங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே காவல்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஊழியர்கள் புறவழிச் சாலையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.