குளித்தலை: குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீஸ்வரர் கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலான ரெத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் முன்பு உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2006ம் ஆண்டு இக்கோயிலில் தெப்பத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறையாததால் தெப்பத்திருவிழா நடத்தப்படவில்லை. இந்தநிலையில் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அய்யர்மலை கோயில் தெப்பக்குளம் நிறைந்து வழிந்தோடியது.இதையடுத்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவையொட்டி நேற்று காலை அய்யர்மலை அருகேயுள்ள சிவாயம் சிவபுரீசுவரர் கோயிலிருந்து சந்திரசேகரர் அம்பாளுடன் அய்யர்மலை கோயில் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் எடுத்துவரப்பட்டு தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் வைக்கப்பட்டது. இந்த குளத்தில் தெப்பமானது 3 முறை வலம் வந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்….