குளித்தலை, ஜன. 21: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. குளித்தலை அடுத்த அய்யர்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ரெத்தனகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இதில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவாரம், பௌர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் கோயிலில் சித்திரை மாதம் தேர் திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். மேலும் சுற்று வட்டாரத்தில் இருந்து குடிப்பாட்டுக்காரர்கள் பொதுமக்கள் பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். திருவிழா காலங்களில் குடிப்பாட்டுக்காரர்கள் தங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட இடத்தில் குடும்பத்துடன் தங்கி அன்னதானம் செய்வது மற்றும் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் அய்யர்மலை ரத்தனகிரீஸ்வரர் கோயில் அருகில் ஒரு சமுதாய மக்கள் பல தலைமுறையாக வழிபாடு செய்ய வழங்கப்பட்ட சத்திரம் இரவோடு இரவாக ஜேசிசி மூலம் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமான அய்யர் மலை கோயில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்டம் ஒரு தரப்பினர் சார்பில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊர் நாட்டாமை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.