சென்னை: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதால் இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்காது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதுகுறித்து பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு, அரசுப் பள்ளிகளிலேயே எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, அரசுப் பள்ளிகளில் மேற்கண்ட வகுப்புகள் தொடரவேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட, இந்த அரசு கடந்த ஓராண்டாக எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக, சுமார் 7 லட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3,000 வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதிகமான எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையினால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததையடுத்து எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள், பணி மாறுதல் வாயிலாக 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக அண்மையில் சென்றுள்ளனர். எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்….