புதுடெல்லி: அமெரிக்க காப்புரிமை சட்டத்தை மீறியதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் கணக்கை டிவிட்டர் நிறுவனம் ஒரு மணி நேரம் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், டிவிட்டர் மட்டும் இணங்க மறுத்து வருகிறது. இதனால், இந்தியாவில் டிவிட்டருக்கு அளிக்கப்படும் சட்ட பாதுகாப்பு ரத்தாகி உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகள் தொடர்பாக டிவிட்டர் நிர்வாகம் மீது தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து வருகின்றனர்.இந்நிலையில், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டிவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டது. அதில், அமெரிக்க காப்புரிமை சட்டத்தை மீறியதற்காக எச்சரிக்கும் வகையில் அவரது கணக்கு முடக்கப்பட்டதாக டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்தது. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டது. இத்தகவலை டிவிட்டரில் வெளியிட்ட ரவி சங்கர் பிரசாத், ‘எந்த முன்னெச்சரிக்கை நோட்டீஸ் இன்றி எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறும் செயலாகும்,’ என கூறி உள்ளார்….