உடுமலை, மார்ச் 6: உடுமலை அருகே அமராவதி அணை நீர்மட்டம் 66.64 அடியாக சரிந்துள்ளதால் பின்பகுதியில் மண் மேடாக காட்சி அளிக்கிறது. உடுமலை அருகே அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.
பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்கள் அணைக்கு நீராதாரமாக உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மழை காரணமாக அணை நிரம்பியது.
இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும், கடும் வெயில் காரணமாகவும் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையில் 66.64 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. நீர்வரத்து 29 கனஅடியாக உள்ளது. 77 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் பின்பகுதி மண் மேடாக காட்சி அளிக்கிறது. இன்னும் 3 மாதங்கள் கோடை காலம் என்பதால் அணை நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.