காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில், அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லா குடிநீர் வழங்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளர் வக்கீல் எழிலரசன் உறுதியளித்தார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் நகர திமுக செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் பொன்.குமார் தலைமையில், கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் பூக்கடைச்சத்திரம், திருக்காலிமேடு, நத்தப்பேட்டை, அம்பேத்கர் நகர், காந்தி சாலை, எண்ணெய்க்காரத்தெரு, காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் நகரில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான காமராஜர் சாலை, காந்தி சாலை ஆகிய முக்கிய பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நகரின் அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லா குடிநீர் வழங்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். சுற்றுலா நகராகவும், கோயில் நகராகவும் பிரசித்தி பெற்றுள்ள காஞ்சிபுரம் நகரின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு புறநகரில் பஸ் நிலையம் ஏற்படுத்தப்படும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். பிரசாரத்தின்போது, மாவட்ட அவைத்தலைவர் சேகரன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்கேபி சீனிவாசன், நிர்வாகிகள் எஸ்.விஜயகுமார், சாட்சி சண்முகசுந்தரம், அவைத்தலைவர் சந்துரு, துணை செயலார்கள் கருணாநிதி, ஜெகநாதன், கன்னியம்மாள் தேவராஜ், பொருளாளர் வெங்கடேசன், இளைஞரணி யுவராஜ், காங்கிரஸ் பூக்கடை ஆனந்தன், நாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாதாசன், இந்திய கம்யூனிஸ்ட் சேர்ந்த சீனிவாசன் உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் இந்த பிரசாரத்தில் கலந்துகொண்டனர். …