தா.பழூர், ஏப்.10: அரியலூர் மாவட்டம் இடங்கண்ணி கிராம நிர்வாக அலுவலர் (பொ)ஆனந்த் இவருக்கு அண்ணங்காரன்பேட்டை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதி இன்றி மணலை மாட்டு வண்டியில் ஏற்றி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவியாளருடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையில் வந்த மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்தனர். இதில் எவ்வித அரசு அனுமதியும் இன்றி மணல் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர்விசாரணை மேற்கொண்டதில் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் செல்லதுரை (45), சாமிநாதன் மகன் சிவசங்கர் (50), துரைக்கண்ணு மகன் தம்பிதுரை (30) ஆகியோர் மாட்டு வண்டிகளில் அரசு அனுமதி இன்றி கொள்ளிடம் ஆற்றின் மணலை விற்பனை செய்வதற்காக ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தா.பழூர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.