திருச்சி: மதுரை அன்னப்பாறை பகுதியை சேர்ந்தவர் முத்துமணி(25). இவர் காரைக்கால் பகுதியில் பன்றிகளை பிடித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் முத்துமணி மற்றும் அவருடன் 10 பேர் மதுரையில் இருந்து திருச்சி வழியாக காரைக்காலுக்கு பன்றிகள் பிடிப்பதற்காக வலைகளுடன் வேனில் வந்தனர். தஞ்சாவூர் பிரதான சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக வேனை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அரியமங்கலத்தை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் கயல்விழிசேகர் மகன் முத்துக்குமார் தனது நண்பர்களுடன் அங்கு வந்து வேனில் இருந்த வலைகளை திருடி சென்றனர். இதுகுறித்து முத்துமணி அரியமங்கலம் போலீசில் நேற்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, போலீசார் முத்துக்குமார் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு வலைகள் மற்றும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதற்கிடையே ஏற்கனவே முத்துக்குமார் மற்றும் இவரது சகோதரர்கள் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர் பெரியசாமியின் மனைவி பார்வதியுடன் கேரளாவிற்கு பன்றி ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்ட தொழில் போட்டியால் அவரை மிரட்டியதாக தெரிகிறது. இதில் பார்வதி தரப்பினரை தீர்த்து கட்ட நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் 3 புகார்களின் கீழ் முத்துக்குமார், சரவணன், ரவுடி குட்டபாலு, கணேசன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் முத்துக்குமார் கைது செய்து செய்யப்பட்டார். மற்றவர்களை தேடி வருகின்றனர்….