அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அளித்த பேட்டி: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். வரி வருவாய் இல்லாததால் தான் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். அதனால்தான் கடன் அதிகமாகி உள்ளது. உடனடியாக வரியை உயர்த்துவோம் என்று நாங்கள் எங்கும் கூறவில்லை. அரசாங்கம் என்பது வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும். அதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 400 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் எவை எவை நடந்தன, எவை நடக்கவில்லை என்று தெரியவில்லை. பணம் காணாமல் போனது எங்கே என்று தெரியவில்லை.வெளிப்படையான நிர்வாகத்தை கொடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலில் தகவல்களை திரட்டுவது, பின்னர் அவற்றைமக்களின் பார்வைக்கு வைத்து விவாதத்துக்கு உள்ளாக்குவது, நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது, திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துவது. இது தான் ஜனநாயக கடமை. இதுவே வெளிப்படையான அரசு என கூறியுள்ளார். அதன்படி நிதி நிலையில் உள்ள தவறான சூழ்நிலையை திருத்தி வருகிறோம். அதை விடுத்து வரியை உயர்த்த போகிறோம். வாக்குறுதி நிறைவேற்றப்படாது என்று கூறுவது வேடிக்கை. பட்ஜெட்டில் அனைத்தும் தெரிய வரும். அரசு வாங்கிய கடனில் முதலீட்டில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று எடப்பாடியே ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் சட்டம் 100 சதவீதமும் முதலீட்டுக்கே என கூறுகிறது. திமுக ஆட்சியில் முதலீட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்….