சென்னை: அதிமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதில் டான்ஜெட்கோவிற்கு (மின்வாரியம்) ₹149 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:2015- 20ம் ஆண்டுகளில் ஒரு யூனிட் மின்சாரம் ₹3க்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைத்த நிலையில், ₹5 வரை மின்சாரம் அதிக விலை கொடுத்து டான்ஜெட்கோ மின்சாரம் வாங்கியது தணிக்கையின் போது கண்டறிப்பட்டுள்ளது. மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு 2015-20ம் காலகட்டத்தில் மொத்த செலவில் 49.5 முதல் 54.40 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு 78 சதவீதத்தில் இருந்து 89 சதவீதம் வரை மின் கொள்முதல் செய்வதை டான்ஜெட்கோ நம்பி இருந்துள்ளனர். இந்நிலையில் மாநில மின் பளு வழங்கு மையம் மின்சார கொள்முதலை தகுதி அடிப்படையில் துல்லியமாக பின்பற்றவில்லை. அதோடு ஒரிசா தால்ச்சர் அனல் மின் நிலையத்தில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ1.65 வாங்க ஒப்பந்தம் செய்த நிலையில் 2019-20 3207.35 மில்லியன் யூனிட் கிடைக்கும் என்று தெரிவித்த நிலையில் குறைவாக 3045.81 மில்லியன் யூனிட் மட்டுமே வாங்கப்பட்டது. அதாவது 94.96 சதவீதமே வாங்குவதற்கு திட்டமிடப்பட்டது. மேலும் பற்றாக்குறையாக மின்சாரத்தை சரி செய்ய ஒரு யூனிட் மின்சாரம் ரூ 2.55 அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.இதே போல 2018-19 மற்றும் 2019-20 களில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதில் டான்ஜெட்கோவிற்கு 28.45 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.குறைந்த சலுகை விலையில் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை புதுபிக்கவும் டான்ஜெட்கோ தவறி இருக்கிறது. அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்துடன் 2012 முதல் 2017 வரை ஐந்து ஆண்டுகளுக்கு 200 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ₹4.99 என்ற விலையில் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொடர்ந்து ஒரு யூனிட்டுக்கு ரூ3.50 மின்சாரம் வாங்க இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை புதுப்பிக்க அதானி நிறுவனம் கோரியது. ஆனால் டான்ஜெட்கோ இறுதி முடிவே எடுக்கவில்லை. இதை தொடர்ந்து 2017-20ம் ஆண்டுகளில் வெளி சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ₹4.10 முதல் ₹5.48 அதிக விலை கொடுத்து டான்ஜெட்கோ கொள்முதல் செய்துள்ளது. இதனால் 2017 முதல் ஆகஸ்ட் 2019 வரை 149.02 கோடி ரூபாய் கூடுதல் செலவு அரசுக்கு ஏற்பட்டுள்ளதாவும், குறைந்த விலை ஒப்பந்தத்தை புதுப்பிக்காதது நியாயமற்றது. இவ்வாறு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….