Sunday, June 16, 2024
Home » அதிமுகவுக்கு நல்ல நீதி கிடைத்துள்ளது தனி நபருக்கு கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுகவுக்கு நல்ல நீதி கிடைத்துள்ளது தனி நபருக்கு கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

by kannappan

சென்னை: தனி நபருக்கோ, குழுவிற்கோ அல்லது குடும்பத்துக்கோ இயக்கத்தை கொண்டு  செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது என்று நல்ல  நீதி அதிமுகவுக்கு கிடைத்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர், ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மாவுக்கும், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுக கட்சியில் சில மாதங்களாக ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டது. அந்த சூழல் காரணமாக இந்த பிரச்னை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றது. நீதிமன்றம் இன்று இரண்டு பொதுக்குழுவில் எடுத்த எந்த தீர்மானங்களும் செல்லாது என்றும், கடந்த ஜூன் 23ம் தேதி அன்று என்ன நிலைமையோ அப்படியே நீடிக்கும் என்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் காணிக்கையாக அளிக்கிறோம். தொண்டர்கள் விரும்பியது இன்று நடந்துள்ளது. இது தொண்டர்கள் இயக்கம். யார் பிளவுபடுத்த நினைத்தாலும் நடக்காது. யாராவது தனி நபருக்கோ, குழுவிற்கோ அல்லது குடும்பத்துக்கோ இந்த இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது என்று தீர்ப்பின் மூலம் நல்ல நீதி அதிமுகவுக்கு கிடைத்துள்ளது.அதிமுகவுக்கு இது முழுமையான வெற்றி. நாங்கள் ஏற்கனவே அறிக்கைகள் மூலமாக தெரிவித்திக்கிறோம். அனைவரும் ஒன்றுபட வேண்டும். யாரெல்லாம் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் கட்சியில் சேர்ப்போம் என்று சொல்லி இருக்கிறோம். யார் எல்லாம் அதிமுகவின் கொள்கைகளுக்கு, கோட்பாடுகளுக்கு இசைந்து வருகிறார்களோ அவர்களெல்லாரும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஜூன் 23ம் தேதி அதிமுக என்ன நிலையில் இருந்ததோ, அந்த நிலை நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்கு நாங்கள் மதிப்பளித்து நடப்போம். அதிமுக மாபெரும் இயக்கம். தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு, அண்ணா சொன்னதுபோன்று விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மீது யார் அவமானங்களை ஏற்படுத்தினாலும் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். எனக்கு தொண்டர்கள் அளித்திருக்கும் பொறுப்பு ஒருங்கிணைப்பாளர் பதவி. எனவே, அனைவரையும் அரவணைத்து செல்வேன். இனி அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்று எதுவும் இல்லை. இனி ஒரே தரப்பு அதிமுகதான். இணை ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து செயல்படுவது பற்றி கலந்து பேசி முடிவு செய்யப்படும். 23-6-2022ம் தேதிக்கு முன்னால் யார் எந்த பதவியில் இருந்தார்களோ அவர்கள் அந்த பதவியில் அப்படியே நீடிப்பார்கள். எங்களுடைய விரிவான நடவடிக்கை அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படி, தமிழக மக்களின் நலன் கருதி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி, சுப்புரத்தினம், எம்பி தர்மர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்….

You may also like

Leave a Comment

13 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi