சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பேரூராட்சியின் 15 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 6 வார்டுகளில் அதிமுகவும், 5 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் சுயேச்சைகளும், 1 வார்டில் பாமகவும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், 3வது வார்டில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திரசேகரை அதிமுகவினர் கடத்தி சென்றுவிட்டனர். அவரை மீட்க வேண்டும் எனக் கோரி பாமகவின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் நெமிலி காவல் நிலையத்தில் பிப்ரவரி 22ம் தேதி புகார் அளித்துள்ளார். அதன்மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், தன் கணவர் சந்திரசேகர் காவல்துறையின் சட்டவிரோத காவலில் உள்ளதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக்கோரி சந்திரசேகரின் மனைவி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, நெமிலி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் ஆஜராகி, பாமக நிர்வாகி சரவணன் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்டு சந்திரசேகர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு பிப்ரவரி 27ல் விசாரிக்கப்பட்டதாக தெரிவித்தார். காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம், சந்திரசேகர் சட்டவிரோத காவலில் இல்லை என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல் நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்றாலும், எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்பதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை மார்ச் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்றைய தினம் சந்திரசேகரை ஆஜர்படுத்த வேண்டும் என்றனர்….