பெரம்பூர்: ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் சிறிய அளவிலான சிலைகளை வாங்கி வீடுகளில் வைத்து 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை பூஜை செய்து, அதன் பிறகு நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்து அமைப்புகள் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி அதனை தங்கள் பகுதியில் வைத்து, 5 நாள் அல்லது 7 நாட்கள் பூஜை செய்து, பின்னர் அந்த சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைப்பார்கள். இந்த விநாயகர் சிலைகள் குயவர்கள் எனப்படும் மண்பாண்ட தொழிலாளர்களால் தயாரிக்கப்படுகிறது. சென்னையில் குயவர்களுக்காகவே ஒரு பகுதி உள்ளது என்றால் அது ஓட்டேரி அருகாமையில் உள்ள குயப்பேட்டை பகுதி தான். இந்தப் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் சிலை தயாரிப்பு பணியிலும், மண்பாண்ட தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தனர். கிருஷ்ண ஜெயந்தி வரும்போது கிருஷ்ணர் சிலைகளும், விநாயகர் சதுர்த்தி வரும்போது விநாயகர் சிலைகளும் செய்வதும் இவர்களது வழக்கம். பண்டிகை இல்லாத நாட்களில் கோயில்களில் விற்கப்படும் சாதாரண பொம்மைகள் மற்றும் வீட்டு அலமாரிகளில் வைக்கப்படும் அழகு பொம்மைகள் மற்றும் மண்பாண்டங்கள் செய்து இவர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர். 500 குடும்பங்கள் வாழ்ந்து வந்த குயப்பேட்டை பகுதியில் தற்போது 100 குடும்பங்கள் மட்டுமே அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிலும் தற்போது 50 குடும்பங்கள் மட்டுமே இந்த சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பே இவர்களது பகுதி உள்ள தெரு முழுவதும் விநாயகர் சிலைகள் செய்து, அடுக்கி வைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படும். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காலகட்டம் என்பதால் பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விநாயகர் தயாரிப்பு மற்றும் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக இந்த ஆண்டு பொது இடங்களில் சிலை வைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சில இடங்களில் 5 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என்றும், சில இடங்களில் 10 அடிக்கு மேல் வைக்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே இவர்களால் விநாயகர் சிலைகளை செய்ய முடியவில்லை. மேலும், தற்போது பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் செய்வதை இவர்கள் நிறுத்திவிட்டனர். அதற்கு பதிலாக திருப்பதி பகுதியில் இருந்து ஏற்கனவே செய்து வைத்திருந்த விநாயகர் சிலைகளை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். ரூ.7 ஆயிரம் முதல் விநாயகர் ரூ.30 ஆயிரம் வரை இந்த விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. கிழங்கு மாவு, பேப்பர் கூழ் போன்ற மூலப் பொருட்களை வைத்து விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. இதனால் கடலில் கரைக்கும் போது எளிதாக அது கரைந்து விடுகிறது. முன்பு போல வியாபாரம் இல்லாததால் இந்த தொழிலை விட்டு பலரும் ஒதுங்கிக் கொண்டனர். இதனால், ஒரு காலத்தில் 500 குடும்பங்கள் பார்த்து வந்த இந்த தொழிலை தற்போது வெறும் 50 குடும்பங்கள் மட்டுமே பார்த்து வருகிறது. இதுகுறித்து குயப்பேட்டையில் 5 தலைமுறைகளாக பொம்மை மற்றும் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் குமார் என்பவர் கூறுகையில், ‘‘இந்த தொழில் எங்களது முன்னோர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த தொழில். இதனை படித்தவர்கள் செய்ய முடியாது. குறிப்பாக கலை சிற்பம் படித்தவர்கள் கூட எங்களைப் போன்று வேகமாக இந்த சிலைகளை செய்ய முடியாது. ஒரு நாளைக்கு நாங்கள் 100 சிலைகளை செய்கிறோம் என்றால், அவர்கள் குறைந்தது 10 சிலைகள் மட்டுமே செய்ய முடியும். படித்ததற்கும், அனுபவத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான்.களிமண்ணை ஊறவைத்து, அதை மிதித்து சிலை வடித்து, காய வைத்து, வண்ணம் பூசி அதனை விற்பனைக்கு அனுப்புவது வரை பல பேரின் உழைப்பு தேவைப்படுகிறது. களி மண்ணை மிதிப்பவருக்கு கூலி தர வேண்டும், சிலை செய்பவருக்கு பணம் தர வேண்டும், வண்ணம் பூசுவதற்கு பணம் தர வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து அதனை தயார் நிலையில் வைத்திருந்தால் அதை வாங்க யாரும் வரமாட்டார்கள். கடன் வங்கி தொழில் செய்வதால், கடன்காரர்கள் வட்டி கேட்டு மிரட்டுவார்கள். இதனால் பாதி குடும்பங்கள் இந்த தொழிலை விட்டு சென்று விட்டன. தற்போது இந்த குயப்பேட்டை பகுதியில் இங்கு இந்தத் தொழிலை 50 குடும்பங்கள் மட்டுமே அதுவும் என்னை போன்ற கடைசி தலைமுறையினர் மட்டுமே செய்து வருகின்றனர். எனது மகன்கள் 2 பேரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வேலையை கற்றுத் தரவில்லை. ஏனென்றால் இதில் அந்த அளவிற்கு லாபம் கிடையாது. எனவே அவர்களாவது வேலைக்கு சென்று சம்பாதிக்கட்டும் என்று விட்டுவிட்டேன். இந்த தொழில் செய்யும் குடும்பங்களை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு எங்களுக்கு தகுந்த இடத்தையும், கடனையும் வழங்க வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு முறையும் பண்டிகைகள் வரும்போது வட்டிக்கு பணம் வாங்கி பொருட்களை வாங்கி வைத்து சிலைகளை தயார் செய்கிறோம். அந்த பொருட்கள் விற்கவில்லை என்றால் கடனாளியாகி பலரும் தொழிலை விட்டனர். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் விநாயகர் சிலைகளை செய்ய தமிழகத்தில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். 3 மாதத்திற்கு முன்பே விநாயகர் சதுர்த்தி அன்று எவ்வளவு அடிக்கு விநாயகர் வைக்க வேண்டும், எதுபோன்ற விநாயகரை வைக்க வேண்டும் என சட்ட திட்டங்களை கொடுத்தால் மட்டுமே ஆர்டர் வாங்கி விநாயகர் சிலை செய்ய முடியும். 2 நாட்களுக்கு முன்பு 3 நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கினால் எங்களால் மொத்தமாக விநாயகர் சிலைகளை செய்ய முடியாது. எனவே இந்த முறை விநாயகர் சிலைகளை செய்வதை நாங்கள் நிறுத்தி விட்டோம். கேட்கின்றவர்களுக்கு திருப்பதியில் இருந்து வாங்கி வந்து கொடுக்கின்றோம்,’’ என்றார். …