தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவகுருநாதன், மாவட்ட செயலாளர் ஜெயசீலி, தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அறிவழகன், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் இந்திராகாந்தி, பொருளாளர் முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோருக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் பதவி உயர்வு, பணி நியமனங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். ஈட்டிய விடுப்பு, ஒப்புவிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடத்த சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 32 பெண்கள் உள்பட 72 பேரை கைது செய்தனர்.