அணைக்கட்டு, மார்ச் 27: அணைக்கட்டு அருகே பட்டப்பகலில் அரசு பஸ் டிரைவர் வீட்டின் பூட்டு உடைத்து 10 சவரன் நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ரெட்டியூர் சாலை ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன்(55), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி தபால் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிக்கொண்டு இருவரும் வேலைக்கு சென்றனர். அவர்களது பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றனர்.
பின்னர், மாலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கருணாகரகன் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகைகள், ₹30 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கருணாகரன் அளித்த புகாரின்பேரில் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிந்து பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.