மதுராந்தகம்,அக்.6: அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா ஆலயம் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள் தலத்தில் 55வது அருள் விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நற்கருணை ஆராதனை, திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு அச்சிறுப்பாக்கம் புனித யோசேப்பு ஆலயத்தில் இருந்து, பக்தர்கள் படை சூழ மழை மலை மாதா ஆலயத்திற்கு கொடியினை பவனியாக கொண்டு வந்து ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில், வாணவேடிக்கைகளுடன் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் கொடியினை ஏற்றி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற திருப்பலியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், இரவு 9 மணியளவில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அருள் விழாவையொட்டி, மழை மலை மாதா அருட்தலம் முழுவதும் வண்ண விளக்குகள், மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், வெள்ளிக்கிழமை (இன்று) காலை திருஉடல் திருவிழா நடைபெற உள்ளது. இதில், நற்கருணை ஆராதனை, திருப்பலி, நாட்டியம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை காலை தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருட்தல அதிபர் சின்னப்பர் உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.