புதுச்சேரி, டிச. 19: பள்ளி கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்துவது சட்டவிரோதமானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குநர் பிரியதர்ஷ்னி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுச்சேரியில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் பெறாமல், பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது, ஆய்வு மேற்கொண்டதில் தெரிய வந்தது. அப்படிப்பட்ட நிலையில் பள்ளியை நடத்துவது தவறு என்றும், அது சட்டத்துக்கு முரணானது.இத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பட்சத்தில், சேர்க்கை போலியானது எனக் கருதப்பட்டு, எதிர்காலத்தில் ஏதேனும் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டால், அவர்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
இதன்மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் போது, பள்ளிகளுக்கு புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் முறையான அங்கீகாரம் உள்ளதா? என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக அங்கீகரிக்கப்படாத தனியார் பள்ளிகளின் பட்டியல் http://schooledn.py.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.